வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா செல்ல அனுமதி: கடைக்காரர்களுக்கு நற்செய்தி
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக லிட்டில் இந்தியாவில் செயல்படும் கடைக்காரர்களின் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19க்கு முந்தைய சூழலில் வாரயிறுதிகளில் லிட்டில் இந்தியாவுக்குப் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தங்குவிடுதிகளில் அடைபட்டுக் கிடப்பதே அதற்குக் காரணம்.
இந்நிலையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் 500 பேர் வரை வாராவாரம் லிட்டில் இந்தியாவுக்கு வந்து செல்ல அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது கடைக்காரர்களுக்கு நற்செய்தியாக அமைகிறது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மனிதவள அமைச்சுடன் இணைந்து லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமை சங்கம் (லிஷா) பணியாற்றி வருவதாக அச்சங்கத்தின் கௌரவச் செயலாளர் ருத்ராபதி பார்த்தசாரதி கூறினார்.
ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இரு வாரங்களுக்கு முன்பு மனிதவள அமைச்சுடன் லிஷா சந்திப்பு ஒன்றை நடத்தியது. கடந்த சனிக்கிழமை, அமைச்சின் அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து அங்கூலியா பள்ளிவாசல், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கும் லிட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் சென்று ஊழியர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து லிஷா கலந்தாலோசனை நடத்தியது.