கொவிட்-19 விதிமீறல்: 15 உணவகங்களை மூட உத்தரவு
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக 15 உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதர 18 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோக, உணவு, பானக் கடைகளாக செயல்பட அனுமதிக்கப்பட்ட இரு இரவுநேர கேளிக்கைக்கூடங்களின் உணவு உரிமங்களும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டன.
பாதுகாப்பு நடைமுறைகளை அத்துமீறியதற்காக 36 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செப்டம்பர் 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையில் சரிசெய்யப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் நடக்கின்றனரா என்பதைச் சரிபார்க்க, 670க்கும் அதிகமான இடங்களில் அமலாக்க அமைப்புகள் கண்காணித்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அத்தகைய ஒரு பரிசோதனையின்போது, ரோச்சோரில் உள்ள ‘ஓம்ஸ் கார்டன்’ எனும் உணவகத்தில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அமர்ந்து உணவருந்தியது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 8 வரை அந்த உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக மற்ற 14 உணவகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.