கியூபா தயாரித்த கொவிட்-19 தடுப்பூசிக்கு வியட்னாம் அனுமதி
கியூபா தயாரித்துள்ள அப்டலா தடுப்புமருந்தை கொவிட்-19 கிருமிக்கு எதிராக பயன்படுத்த வியட்னாம் அனுமதி வழங்கியுள்ளது.
வியட்னாமிய அதிபர் நுவான் சுவான் புக், அதிகாரபூர்வ பயணமாக கியூபா தலைநகர் ஹவானாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணிநேரத்தில் தடுப்பூசி பற்றி அறிவிக்கப்பட்டது. வியட்னாமில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டாவது தடுப்பூசி இது.
வியட்னாமில் தற்போது கொரோனா கிருமிப் பரவல் அதிகமாக உள்ளபோதும், தென்கிழக்காசியாவிலேயே மிகக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் அதுவும் ஒன்று.
அந்நாட்டில் உள்ள 98 மில்லியன் பேரில் சுமார் 6.3% பேருக்குத்தான் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.