சிங்கப்பூரில் புதிதாக 2,475 பேருக்கு கொவிட்-19 தொற்று; எண்மர் மரணம்
கொவிட்-19 தொற்று காரணமாக 60க்கும் 94 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் எட்டுப் பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (அக்டோபர் 4) இரவு தெரிவித்தது.
அவர்களில் ஆடவர்கள் நால்வரும் மாதர்கள் நால்வரும் அடங்குவர். அவர்களில் ஐவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மூவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.
சிங்கப்பூரில் தொடர்ந்து 15வது நாளாக கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாதம் முதல் நான்கு நாள்களில் மட்டும் 26 மரணங்கள் பதிவாகின.
இதற்கிடையே, புதிதாக 2,475 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. சமூக அளவில் 1,859 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 601 பேரும் பாதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் திங்கட்கிழமை நிலவரப்படி 1,335 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 226 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.