கொவிட்-19 கிருமிக்கு எதிரான 300,000 மாத்திரைகளை வாங்க ஆஸ்திரேலியா திட்டம்
அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ‘மெர்க் அண்ட் கோ’ தற்போது தயாரித்து, பரிசோதித்து வரும் கொவிட்-19 கிருமிக்கு எதிரான மாத்திரைகளை ஆஸ்திரேலியா வாங்கவுள்ளது.
சோதனை முயற்சியாக முதலில் 300,000 மாத்திரைகள் வாங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார்.
மோல்னுபிரவீர், கொவிட்-19க்கு எதிராக வாய்வழி செலுத்தப்படும் முதல் கிருமித் தடுப்பு மருந்தாக இருக்கும். இது கடுமையான பாதிப்புகளைக் குறைக்கலாம் என நிபுணர்களின் கருதுகின்றனர்.
இந்த மாத்திரைகளை நாள் ஒன்று இரண்டு முறை என 5 நாள்களுக்கு உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று திரு மோரிசன் கூறினார்.
அந்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டால் அவை அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் மக்களுக்குக் கிடைக்கும்.
தென்கொரியா, தாய்லாந்து, தைவான், மலேசியா ஆகிய நாடுகள் இந்த மருந்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பிலிப்பீன்ஸ் இம்மாத்திரையை பரிசோதித்து வருகிறது.
இதற்கிடையில், ஆஸ்திரேலியா அதன் தடுப்பூசி விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, வயது வந்தவர்களில் 80% முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில், அன்றாடத் தொற்று எண்ணிக்கை ஆக அதிகமாகப் பதிவாகும் மாநிலமாக விக்டோரியா உள்ளது. மொத்தம் 1,763 புதிய தொற்றுச் சம்பவங்கள் சனிக்கிழமையன்று பதிவாகின.