அதிக விமானங்களை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆயத்தம்
தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றிப் பயணம் செய்யும் திட்டம் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை சிங்கப்பூருக்கு அழைத்துவர ஏதுவாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகமான விமானங்களை இயக்கத் தயாராகி வருகிறது.
ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோபன்ஹேகன், லண்டன், லாஸ் ஏஞ்சலிஸ், மிலான், நியூயார்க், பாரிஸ், ரோம் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) விமானங்களை இயக்க இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
தென்கொரியத் தலைநகர் சோலில் இருந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் அந்நிறுவனம் விமான சேவைகளை வழங்கும்.
இப்போதைக்கு புருணையின் பண்டார் ஸ்ரீ பகவான், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட், மியூனிக் ஆகிய நகரங்களில் இருந்து ‘விடிஎல்’ விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கி வருகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனமான ‘ஸ்கூட்’, இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து வாரம் மும்முறை சிங்கப்பூர்-பெர்லின் இடையே இடைநில்லா விமானங்களை இயக்க இருக்கிறது.