சிங்கப்பூர் உட்பட பத்து நாடுகளுக்குக் கதவைத் திறந்துவிடும் தாய்லாந்து
பேங்காக்: சிங்கப்பூர் உட்பட கொவிட்-19 பரவல் அபாயம் குறைவாக உள்ள குறைந்தது பத்து நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை வரவேற்கத் திட்டமிட்டு வருகிறது தாய்லாந்து.
தனிமைப்படுத்திக்கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இதன் தொடர்பில், இவ்வாரத்திற்குள் முடிவெடுக்கும்படி கொவிட்-19 நிலவர நிர்வாக மையத்தைப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா வலியுறுத்தி இருக்கிறார்.
அந்தப் பயணிகள், தாய்லாந்திற்குக் கிளம்புவதற்கு முன்பும் தாய்லாந்தை வந்தடைந்ததும் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றால் போதுமானது.
“அதன்பின், தாய்லாந்து மக்களைப் போல அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம்,” என்றார் பிரதமர் பிரயுத்.
முதற்கட்டமாக, சிங்கப்பூர், ஜெர்மனி, சீனா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட குறைந்தது பத்து நாட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாரத்தில் இடம்பெறும் கொவிட்-19 நிலவர நிர்வாக மையக் கூட்டத்தின்போது, நாடுகளின் முழுப் பட்டியல் இறுதிசெய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அப்பட்டியல் வரும் மாதங்களில் மேலும் விரிவுபடுத்தப்படும்.