புதுடெல்லி: இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை அங்கீகரிக்க 30 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்களைச் சுட்டி ‘பிடிஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நேப்பாளம், பெலருஸ், லெபனான், ஆர்மீனியா, உக்ரேன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா உள்ளிட்ட நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை அங்கீகரிப்பதில் இந்தியாவுடன் இருதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்ளாதேஷ், போட்ஸ்வானா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா செல்வோர், கட்டாய கொரோனா நெறிமுறைகளுடன் கூடுதலாக சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, அடுத்த மாதத்தில் இருந்து அனைத்துலகப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடவிருக்கும் அமெரிக்கா, இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் கொவிஷீல்டுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இதுவரை மொடர்னா, ஃபைசர்-பயோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், ஆக்ஸ்ஃபர்ட்-அஸ்ட்ராஸெனக்கா, கொவிஷீல்டு, சினோஃபார்ம், சினோவேக் ஆகிய ஏழு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.