தடுப்பூசி போட வந்தவர்களைப் பாம்பைக் காட்டி மிரட்டியதால் பரபரப்பு
அஜ்மீர்: கொவிட்-19 தொற்றுக்கெதிரான போரில் தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதமாக விளங்கிவரும் நிலையில், அதைப் போட்டுக்கொள்ளத் தயங்குவோரும் உண்டு.
அவர்களின் தயக்கத்தை உடைத்தெறிவது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
அப்படியொரு புதுமையான சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நாகேலாவ் எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.
சில நாள்களுக்குமுன் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட ஒரு மருத்துவக் குழுவினர் அவ்வூருக்குச் சென்றனர்.
கமலா தேவி என்பவரின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் பாம்பைக் காட்டி மருத்துவக் குழுவினரை அச்சுறுத்தினார்.
பாம்பு பிடிக்கும் இனத்தைச் சேர்ந்த கமலா தேவி, தமக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லை என்றும் மீறி தம்மை வலியுறுத்தினால் பாம்பை மருத்துவக் குழுவினர்மீது தூக்கிப்போட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார்.
ஆனாலும் அஞ்சாத மருத்துவக் குழுவினர், தடுப்பூசியின் அவசியத்தை அவரிடம் எடுத்துக்கூறினர்.
தகவலறிந்து விரைந்துவந்த உள்ளூர்வாசிகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கமலா தேவியை வற்புறுத்தினர். சில மணி நேரத்திற்குப் பிறகு, ஒருவழியாக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணங்கினார். அதன்பின்னர், அவ்வூரில் மேலும் 20 பேர்க்குத் தடுப்பூசி போடப்பட்டது.