நியூசிலாந்தில் புதிய உச்சத்தைத் தொட்ட கொவிட்-19 பாதிப்பு
வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொவிட்-19 பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டது.
கடுமையான முடக்கநிலையும் எல்லைக் கட்டுப்பாடுகளும் நடப்பில் உள்ளபோதும், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கிருமித்தொற்று காரணமாக அந்நாட்டின் ஆக்லாந்து நகரத்திலும் அண்டை நகரத்திலும் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இதற்கிடையே, ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரத்திற்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
நேற்று அங்கு பதிவான 94 தொற்றுப் பாதிப்புகளில், 87 ஆக்லாந்தில் பதிவானவை.
கட்டுப்பாடுகளை மீறுவோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுமே கிருமி பரவலுக்குக் காரணம் என்று நியூசிலாந்து அதிகாரிகள் சாடுகின்றனர்.
அனைவரும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு இதுவரை 67 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரித்து, கொவிட்-19 கிருமித்தொற்றை நிரந்தர நோயாகக் கையாள அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.