2022லும் கொரோனா நீடித்திருக்கும்: உலக சுகாதார நிறுவனம்
குறைந்த வருமான நாடுகளுக்குப் போதிய அளவில் தடுப்பூசி கிடைக்காததால் அடுத்த ஆண்டிலும் கொவிட்-19 பெருந்தொற்று நீடித்திருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற கண்டங்களில் 40% மக்கள் தடுப்பூசி போட்டுவிட்ட நிலையில், ஆப்பிரிக்காவில் இன்னும் ஐந்து விழுக்காட்டினர்க்குக்கூட தடுப்பூசி போடப்படவில்லை.
உலகளவிலான தடுப்பூசி எண்ணிக்கையில் 2.6% மட்டுமே ஆப்பிரிக்காவில் போடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி கூறுகிறது.
இதனால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசி வழங்குவதில் குறைந்த வருமான நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க ஏதுவாக, பணக்கார நாடுகள் வரிசையில் தங்களது நிலையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவர் டாக்டர் புரூஸ் ஐல்வர்ட் வலியுறுத்தியுள்ளார்.
மருந்து நிறுவனங்களும் பணக்கார நிறுவனங்களும் உறுதியளித்ததில் ஏழில் ஒரு தடுப்பூசி மட்டுமே ஏழை நாடுகளைச் சென்றடைந்துள்ளது என்று தடுப்பூசி நன்கொடைக்கான ‘பீப்பல்ஸ் வேக்சின்’ அமைப்பு தெரிவித்து இருக்கிறது.