விமானப் பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் இந்தோனீசியா
ஜகார்த்தா: ஆண்டிறுதி விடுமுறையில் அதிகமானோர் பயணம் செய்வர் என்பதால் மீண்டும் கொவிட்-19 பரவல் வேகமெடுக்கச் சாத்தியமுள்ளது. அதனைத் தடுக்கும்விதமாக, விமானப் பயணக் கட்டுப்பாடுகளை இந்தோனீசியா கடுமையாக்கி வருகிறது.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் பயணிகளுக்கென, அவர்கள் புறப்பாட்டிற்குமுன் ‘தொற்று இல்லை’ எனச் சான்று அளித்திருந்தாலும், தனியாக இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொண்ட, பிசிஆர் பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்ற பயணிகள் மட்டுமே விமானங்களில், குறிப்பாக பாலி, ஜகார்த்தா பகுதிகளுக்கான விமானங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் கொவிட்-19 பணிக்குழுவின் பேச்சாளர் விக்கு அடிசாஸ்மிட்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றும் உயிரிழப்பும் குறைந்து வருவதையடுத்து, இந்தோனீசியா மீண்டும் தனது அனைத்துலக எல்லைகளைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.
பொருளியலை மீட்டெடுக்கும் விதமாக, கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளில் பலவற்றையும் அது தளர்த்தியிருக்கிறது.
அத்துடன், பயணத்துறைக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், 19 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பாலி, ரியாவ் தீவுகளின் கதவுகள் கடந்த வாரம் முதல் திறந்துவிடப்பட்டுள்ளன.