வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5,000 கொவிட்-19 படுக்கைகள்
கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவருவதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கென 5,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்திலிருந்து பெரிய தங்குவிடுதிகளில் அமைந்துள்ள மையப்படுத்தப்பட்ட வளாகங்களில் அந்தப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 48 தங்குவிடுதிகளில் குணமடைவதற்காக உள்ள வளாகங்களில் மேலும் 6,000 படுக்கைகள் உள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறித்து மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் ஆகியோர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளிலும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குணமடைவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களின் படுக்கைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் தங்கலாம். அறிகுறிகளின்றி கிருமி தொற்றியோர் அல்லது இலேசான அறிகுறிகள் இருப்போர் அங்கு தங்கி, குணமடையலாம்.
மையப்படுத்தப்பட்ட வளாகங்களில் தங்கி, இதுவரை 7,900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீண்டு, தங்களது விடுதிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும் டாக்டர் கோ குறிப்பிட்டார்.
இதனிடையே, தங்குவிடுதி வெளிநாட்டு ஊழியர்களில் 97 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக டாக்டர் டான் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிங்கப்பூர் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இன்னும் சில ஆயிரம் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடவில்லை என்றும் அவர் சொன்னார்.
“அவர்களில் வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதனை இன்னும் இங்கு பதிவுசெய்யாதோரும் இருக்கலாம்,” என்றார் அவர்.
வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள், ஒரு சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று ‘சீராலஜி’ சோதனை செய்துகொள்ளுமாறும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணங்களைக் காட்டி பதிவுசெய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.