கொவிட்-19 ‘தொற்று அபாயம்’ உள்ள நாடாக சிங்கப்பூரை வகைப்படுத்திய ஜெர்மனியில் தொற்று அதிகரிப்பு
குளிர்காலம் நெருங்கும் வேளையில், ஜெர்மனியில் கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த இரு வாரங்களில் அங்கு தொற்று 57 விழுக்காடு உயர்ந்துள்ளது. அன்றாடம் சராசரியாக 12,775 பேருக்குத் தொற்று உறுதியாகி வருகிறது. இதே காலகட்டத்தில் மரண எண்ணிக்கை 11 விழுக்காடு கூடியுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள வேளையில், ஜெர்மனியில் மீண்டும் தொற்று ஏறுமுகம் கண்டு வருவது அந்நாட்டு அதிகாரிகளைக் கவலையடையச் செய்துள்ளது.
அண்மையில், கொவிட்-19 ‘தொற்று அபாயம்’ உள்ள நாடாக சிங்கப்பூரை வகைப்படுத்தியிருந்தது ஜெர்மனி.
இந்நிலையில், பிரிட்டனிலும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அங்கு நாள் ஒன்றுக்கு 2,000 பேருக்குத் தொற்று உறுதியானது. ஆனால் கடந்த வாரம், அன்றாடம் சராசரியாக 47,209 பேருக்குத் தொற்று உறுதியானது. இரு வாரங்களுக்கு முன்பிருந்த எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, இது 30 விழுக்காடு அதிகம்.
மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துள்ளது. ‘பூஸ்டர்’ தடுப்பூசித் திட்டத்தால் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று அரசாங்கம் கூறியது.
சிங்கப்பூர், பதினொரு நாடுகளுடன் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைக் கொண்டுள்ளது. அவற்றில் ஜெர்மனியும் பிரிட்டனும் அடங்கும். இத்திட்டத்தின்கீழ், அந்நாடுகளிலிருந்து இங்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.