கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் 2வது நாளாக ஒன்றுக்குக்கீழ் பதிவானது
சிங்கப்பூரில் வாராந்திர கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) 1க்குக் கீழ் பதிவானது.
தொற்று விகிதம் நேற்று 0.93ஆகக் குறைந்தது. புதன்கிழமை அது 0.96ஆக இருந்தது என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு தெரிவித்தது.
இதற்கிடையே, கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 17 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 55 முதல் 93 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் இதுவரை 459 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், புதிதாக 3,003 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் 2,780 பேரும் தங்குவிடுதிகளில் 220 வெளிநாட்டு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் மூவருக்கும் தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 210,978ஆக உள்ளது.