உணவு, பானக் கடைகளில் பதிவுசெய்யப்பட்ட இசைக்கு நவம்பர் 10 முதல் அனுமதி
உணவு, பானக் கடைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை (நவம்பர் 10) முதல், பதிவுசெய்யப்பட்ட இசை ஒலிக்க அனுமதிக்கப்படும்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 18ஆம் தேதியிலிருந்து உணவு, பானக் கடைகளில் இசை ஒலிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இன்று திங்கட்கிழமை (நவம்பர் 8) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இதனைத் தெரிவித்தார்.
எனினும், நேரடி இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து அனுமதி இல்லை.
இதற்கிடையே, வழிபாடுகள், நேரடி நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படும்போது ஒவ்வொரு பிரிவிலும் (zone) கூடுதலானோர் இடம்பெற அனுமதிக்கப்படும். ஆனால், ஒட்டுமொத்த வருகையாளர் எண்ணிக்கைக்குள் அது இருக்க வேண்டும்.
சந்திப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள் போன்றவையும் இவற்றுள் அடங்கும்.
ஒவ்வொரு பிரிவிலும் 100 பேர் வரை இடம்பெறலாம். பிரிவுகளுக்கு இடையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.