மலேசியாவில் தொற்று அதிகரிப்பு; மேலும் உயரலாம் என அச்சம்
கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதிக்குப் பிறகு ஆக அதிகமாக இன்று வெள்ளிக்கிழமை 6,517 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 6,000க்குமேல் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து சராசரியாக வேறு எத்தனை பேர்க்கு தொற்று பரவலாம் என்பதைக் குறிப்பிடும் ‘ஆர்-நாட் (R0) மதிப்பு ஒன்றை எட்டியுள்ளது. நேற்று இம்மதிப்பு 0.99 ஆக இருந்தது.
சிலாங்கூர் (1.03), கிளந்தான் (1.02), கோலாலம்பூர் (1.04), புத்ராஜெயா (1.16), நெகிரி செம்பிலான் (1.01), பாகாங் (1.01) ஆகிய இடங்களில் அவ்விகிதம் ஒன்றைவிடக் கூடுதலாக இருக்கிறது.
மலேசியாவில் இவ்வாண்டு ஜூலை பிற்பகுதியில் இருந்து கிருமித்தொற்று இறங்குமுகத்தில் இருந்து வந்த நிலையில், அக்டோபர் 20ஆம் தேதியில் இருந்து நிலைமை தலைகீழானது.
தேசிய அளவில் கடந்த ஏழு நாள்களில் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் 3.3% குறைந்தது.
ஆனாலும், திரெங்கானு (33%), கோலாலம்பூர் (17%), நெகிரி செம்பிலான் (10%) ஆகிய வட்டாரங்களில் அது கூடியுள்ளது.
இதனுடன், மலாக்காவிலும் சரவாக்கிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“சாபாவில் நிகழ்ந்ததைப்போல, இவ்விரு மாநிலத் தேர்தல்களும் புதிய கொரோனா அலையை உருவாக்கிவிடுமோ என்று மிகுந்த கவலையாக இருக்கிறது,” என்றார் கணக்காளராகப் பணியாற்றும் ஆலியா ஸைனல், 30.
பொதுநலனைக் கருத்தில்கொண்டு, மலாக்காவில் தேர்தல் தொடர்பான ஒன்றுகூடல்களுக்கு அனுமதியில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, மலேசியாவில் கிட்டத்தட்ட 75.7 விழுக்காட்டினர் முழுமையாகவும் 78.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர்.