இந்தியா: ஒன்றரை ஆண்டுகளில் ஆகக் குறைவான கொவிட்-19 பாதிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று காலை அறிவித்தது.
கடந்த 543 நாள்களில், ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான கொரோனா பாதிப்பு இது.
பண்டிகைக் காலம் என்றபோதும் கொரோனா பாதிப்பு உயராததற்கு அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் உடலில் ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோயெதிர்ப்பான்கள் உருவானதுமே காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் துர்க்கா பூஜை, இம்மாதத்தில் தீபாவளி என முக்கியப் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக, பொருள்கள் வாங்கவும் குடும்பத்தினரைச் சந்திக்கவும் என பல கோடி மக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமலேயே வெளியில் நடமாடினர்; பயணம் செய்தனர்.
பெர்உநகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் முகக்கவசம் அணியும் பழக்கம் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.
“தீபாவளிக்குப் பிறகும்கூட கிருமித்தொற்று உயரவில்லை,” என்றார் தேசிய தொற்றுநோயியல் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.டி.குப்தே.
இயற்கையாகவே நோய் தொற்றியதன்மூலம் பெரும்பாலான இந்தியர்களின் உடலில் நோயெதிர்ப்பான்கள் உருவானதே இதற்கு முக்கியக் காரணம் என்று டாக்டர் குப்தே குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜூலை மாதம்வரை, கிட்டத்தட்ட 70% இந்தியர்களை இயல்பாகவே கிருமி தொற்றிவிட்டதாக அரசாங்கக் கருத்தாய்வுகள் மதிப்பிட்டுள்ளன.
இதுவரை, இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 944 மில்லியன் பேரில் 81 விழுக்காட்டினர் குறைந்தது முதல் தவணை தடுப்பூசியும் 43 விழுக்காட்டினர் முழுமையாகவும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
18 வயதிற்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவது இன்னும் தொடங்கப்படவில்லை.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் இதுவரை 34.5 மில்லியன் பேரை கொரோனா தொற்றிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 236 பேர் இறந்துவிட, கொரோனா தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 466,147ஆக உயர்ந்துவிட்டது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்வதும் குறைந்து வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் பரிசோதனைகளுக்குமேல் செய்யக்கூடிய திறனைக் கொண்டிருந்தாலும் இப்போது ஒரு மில்லியனுக்கும் குறைவாகவே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.