கொவிட்-19 நோயாளிகளை ஜெர்மனிக்கு அனுப்பும் நெதர்லாந்து
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், சிகிச்சைக்காக கொவிட்-19 நோயாளிகள் அண்டை நாடான ஜெர்மனிக்கு அனுப்பும் நடைமுறையை நெதர்லாந்து தொடங்கியுள்ளது.
ரோட்டர்டாம் நகரில் இருந்து கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் போச்சும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இன்று காலை கொவிட்-19 நோயாளி ஒருவர் அவசர மருத்துவ வண்டி வழியாக அனுப்பி வைக்கப்பட்டார். மாலையில் இன்னும் ஒருவரை அனுப்பி வைக்கவிருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
நெதர்லாந்தைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்காக ஜெர்மனி மருத்துவமனைகள் 20 படுக்கைகளை ஒதுக்கியிருக்கின்றன. முந்திய கொரோனா அலைகளின்போதும் இப்படி நெதர்லாந்தைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் பலர்க்கு ஜெர்மனி மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தன.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நெதர்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து, கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி, இதுவரை 170க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.