‘தொற்று அபாயம்’ உள்ள பிரிவில் கூடுதல் நாடுகள் சேர்க்கப்படுகின்றன
பல்கேரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பர்க், நார்வே, போலந்து ஆகிய ஏழு நாடுகள், வரும் டிசம்பர் 6ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து ‘தொற்று அபாயம் அதிகம்’ உள்ள பிரிவில் வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாள்களில் கானா, மலாவி, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் குறுகியகால வருகையாளர்களும் நாளை (டிசம்பர் 4) இரவு 11.59 மணியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையவோ சிங்கப்பூர் வழியாக மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
‘ஓமிக்ரான்’ வகை கொரோனா கிருமிக்கு எதிரான பதில் நடவடிக்கையாக எல்லை நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
“சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்கெனவே அனுமதி பெற்றவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். முதற்கட்டமாக, இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் நான்கு வாரங்களுக்குப் பொருந்தும். அதன் பின்னர், அவற்றை நாங்கள் மறுஆய்வு செய்து, தேவை ஏற்பட்டால் அவற்றை நீட்டிப்போம்,” என்று சுகாதார அமைச்சு கூறியது.