பிரிட்டனில் உயர்ந்துவரும் ஓமிக்ரான் தொற்றுப் பரவல்; மெத்தனம் வேண்டாம் என்று எச்சரிக்கை
பிரிட்டனில் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் மூன்று நாள்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகி வருவதை அடுத்து, அங்கு மீண்டும் கொரோனா தொற்று வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமிக்ரான் தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் முதல் பணக்கார நாடாக பிரிட்டன் இருக்கும் என்று தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை (டிசம்பர் 9) நிலவரப்படி பிரிட்டனில் 817 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொற்றுப் பரவல் விகிதம் தொடர்ந்து உயர்ந்தால், அடுத்த இரண்டிலிருந்து நான்கு வாரங்களுக்குள் பிரிட்டனில் உள்ள கொரோனா தொற்றுச் சம்பவங்களில் பாதி, ஓமிக்ரான் வகையைத் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
அந்நாட்டு சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இரண்டு நாள்களுக்கு முன்னர் இவ்வாறு கூறியது.
தென் ஆப்பிரிக்காவைப் போன்ற மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல ஓமிக்ரான் வகைக் கிருமிதான் ஆக அதிகமாக பரவி வருகிறது.
தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக அவ்வளவு செயல்திறனுடன் வேலை செய்யவில்லை.
ஆனால் மற்ற கொரோனா வகைகளைவிட கடுமையான நோய் பாதிப்பு இதில் குறைவாக உள்ளது.
இருப்பினும், ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தை அடைந்தால் அதில் சிறிய விகிதத்தினருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டால்கூட மருத்துவமனைகளில் அதிகமானோர் அனுமதிக்கப்படலாம். மரணங்களும் அதிகரிக்கலாம்.
பிரிட்டனின் தற்போதைய நிலையை மற்ற உலக நாடுகளும் எதிர்கொள்ளலாம் என்று வெல்கம் சேங்கர் நிலையத்தின் கொவிட்-19 மரபணு ஆய்வுத் திட்டத்தின் தலைவர் ஜெஃப்ரி பேரட் கூறினார்.
நாடுகள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றார் அவர்.
ஓமிக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 8) மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்தது.