ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 65 பயணிகளில் 53 பேர் ‘விடிஎல்’ மூலம் சிங்கப்பூர் வந்தனர்
சிங்கப்பூரில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த பயணிகளில் 65 பேரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
அந்த 65 பேரில் 53 பேர், தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் நடத்தப்படும் ‘பிசிஆர்’ பரிசோதனையில், அந்த 53 பேரில் 41 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டின் மேம்படுத்தப்பட்ட பரிசோதனை திட்டத்தின் மூலம் எஞ்சிய 12 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டது.
ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, புதிய ‘விடிஎல்’ விமான, பேருந்துப் பயணச்சீட்டுகளின் விற்பனை டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை ஒருமாத காலத்திற்கு நிறுத்திவைக்கப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை (டிசம்பர் 22) அறிவித்து இருந்தது.
பல நாடுகளில் ஓமிக்ரான் திரிபு பரவிவரும் வேளையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் 76 பேரிடம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.