இந்தியா: 1,700 மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்குத் தொற்று
புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட்-19 வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில், அந்நோய்த்தொற்றுக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆளாவதும் கூடி வருகிறது.
ஒன்பது மாநிலங்களில், ஒரே வாரத்தில் மட்டும் 1,700க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பிற மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டதாக ‘இந்தியா டுடே’ ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளைச் சேர்ந்த 400க்கு மேற்பட்ட மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார், மகாராஷ்டிர மாநிலங்களில் இதுவரை தலா 300க்கு மேற்பட்ட மருத்துவத் துறையினருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், டெல்லி, சண்டிகர், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மருத்துவத் துறையைச் சேர்ந்த பலர் அந்நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.