விமானச் சேவைகளைக் குறைக்கும் இண்டிகோ; பயணத் தேதி மாற்றக் கட்டணம் தற்காலிக ரத்து
இண்டிகோ விமான நிறுவனம், ஓமிக்ரான் தொற்றுப் பரவலால் அதன் விமானச் சேவைகளில் 20 விழுக்காட்டை ரத்து செய்யப் போவதாகக் கூறியுள்ளது.
அத்துடன் வாடிக்கையாளர் தேவைக்கு இணங்க, பயணத் தேதிகளை மாற்றுவதற்கான கட்டணங்களை மார்ச் 31ஆம் தேதி வரை பயணிகள் செலுத்தத் தேவையில்லை என்றும் அது கூறியது.
இண்டிகோ, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) அன்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்களைத் தெரிவித்தது.
கொவிட்-19 கிருமித் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல பயணிகள் தங்கள் பயணங்களை வேறு தேதிகளுக்கு மாற்றி வருவதாகக் கூறியது.
ஏற்கெனவே விமான டிக்கெட்டுகளை வாங்கியவர்களும் இனி வாங்குவோரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பயணத் தேதிகளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அது விவரித்தது.
இது மார்ச் 31ஆம் தேதி வரையிலான விமானச் சேவைகளுக்குப் பொருந்தும் என்றும் அது கூறியது.
தேவை குறைவதால், விமானச் சேவைகளையும் குறைக்கவுள்ளதாக இண்டிகோ குறிப்பிட்டது.
முடிந்தவரை, 72 மணிநேரத்துக்கு முன்னதாக விமானச் சேவை ரத்து பற்றி அறிவிக்கப்படும் என்றும் பயணிகள் அடுத்த விமானச் சேவைக்கு மாற்றிவிடப் படுவார்கள் என்றும் நிறுவனம் கூறியது.
பயண தேதிகளை மாற்ற அதன் இணையத்தளத்தில் உள்ள பிளான் பி சேவையைப் பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்களை அது கேட்டுக்கொண்டது.