புதிதாக 549 பேருக்கு ஓமிக்ரான் தொற்று
சிங்கப்பூரில் வியாழக்கிழமை (ஜனவரி 13) புதிதாக 549 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் பதிவாகி இருந்த ஓமிக்ரான் பாதிப்பு 797ஆக இருந்தது. அந்த 549 பேரில் 183 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள்.
சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் அன்றாட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, 960 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை இந்த எண்ணிக்கை 882ஆக இருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 960 பேரில் 479 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 481 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது.
வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 1.43க்குக் குறைந்தது. புதன்கிழமை அது 1.60ஆக இருந்தது.
கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் புதிதாக யாரும் மரணமடையவில்லை.