இந்தியாவில் மூன்றாவது கொவிட்-19 அலை அடுத்த மூன்று வாரங்களில் உச்சம் தொடலாம்: அறிக்கை
இந்தியாவில் மூன்றாவது கொவிட்-19 அலை அடுத்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டக்கூடும் என்று ‘எஸ்பிஐ ரிசர்ச்’ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தொற்றைப் பதிவுசெய்து வந்த 15 மாவட்டங்களில் தற்போது தொற்று வெகுவாகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, நிபுணர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
புதிதாக பதிவாகும் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த அந்த 15 மாவட்டங்களின் பங்கு, ஜனவரியில் 37.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. டிசம்பரில் அது 67.9 விழுக்காடாக இருந்தது.
என்றாலும், அந்த 15ல் 10 மாவட்டங்களில் பெருநகர்கள் என்பதைச் சுட்டிய அந்த அறிக்கை, பெங்களூரிலும் புனேவிலும் தொற்று விகிதம் இன்னும் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டது.
புதிய தொற்றுப் பாதிப்புகளில் கிராமப்புற மாவட்டங்களின் பங்கு ஜனவரியில் 32.6 விழுக்காடாக அதிகரித்திருப்பதையும் ஆய்வு சுட்டியது. டிசம்பரில் அந்த விகிதம் 14.4 விழுக்காடாக இருந்தது.