புதிதாக 3,155 பேருக்கு கொவிட்-19; வாராந்திர தொற்று விகிதம் கூடியது
சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) புதிதாக 3,155 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
வாராந்திர தொற்று விகிதம் 2.7 ஆகக் கூடியது.
முந்தைய வாரத்தைவிட கடந்த வாரம் தொற்று நிலவரம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் இந்த அளவு, வியாழக்கிழமை 2.17 ஆக இருந்தது என்று அமைச்சு தெரிவித்தது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 1,616 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்களில் 1,278 பேர் உள்ளூர்வாசிகள். 338 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஏஆர்டி பரிசோதனை மூலம் 1,539 பேருக்குத் தொற்று தெரியவந்தது. இவர்களில் 1,516 பேர் உள்ளூர்வாசிகள். 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
தொற்றால் மேலும் ஒருவர் மாண்டுவிட்டதாகவும் அமைச்சு கூறியது. மொத்த மரண எண்ணிக்கை 846 ஆக உள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 307,813. மருத்துவமனைகளில் 360 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள்னர்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றவர்களில் 91% முற்றிலும் தடுப்பூசி போட்டுள்ளனர். 54% மக்கள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.