'அடிக்கடி போடுவதைவிட ஆண்டுக்கு ஒரு முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது மேல்'
பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசியை அடிக்கடி போட்டுக் கொள்வதைவிட, ஆண்டுக்கு ஒரு முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது மேலாக இருக்கும் என்று ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்பர்ட் போர்லா கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, இனி நான்கு ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் ஆகுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அப்படியான சூழ்நிலை நல்லது அல்ல என்றும் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் போன்ற சூழல் அமைவதே தமது விருப்பம் என்றும் திரு போர்லா கூறினார்.
ஆண்டுக்கு ஒரு முறை என்றால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செய்வதும் அவர்கள் அதை நினைவில் வைத்துக் கொள்வதும் எளிதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒமிக்ரான், டெல்டா உள்ளிட்ட கொரோனா கிருமி வகைகளுக்கு எதிரான தடுப்பாற்றல் கொண்ட தடுப்பூசியைத் தயாரிக்க ஃபைசர் முயன்று வருவதாக திரு போர்லா கூறினார்.
ஃபைசர் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி கடும் நோய், மரணங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நன்கு வேலை செய்கிறது.
ஆனால் கிருமிப் பரவலைத் தடுப்பதில் அதன் செயல்திறன் சற்று குறைவாக உள்ளது.