இந்தியா: வரும் வாரங்களில் ஓமிக்ரான் அலை தீவிரமடையலாம்
இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்று எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையலாம் என்று அந்நாட்டின் முன்னணி நிபுணர்களில் சிலர் கணித்துள்ளனர்.
சமூக அளவில் ஓமிக்ரான் திரிபு ஏற்கெனவே பரவி வருவதைச் சுட்டிய அவர்கள், பெருநகர்களில் தொற்று குறைந்தாலும் மருத்துவமனைகளில் கூடுதலானோர் அனுமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 306,064 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த நான்கு நாள்களில் பதிவாகிய சராசரி அன்றாடத் தொற்றைவிட இது ஏறக்குறைய 8 விழுக்காடு குறைவு.
தொற்றுப் பாதிப்பு காரணமாக மேலும் 439 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த ஐந்து நாள்களில் இது ஆகக் குறைவான எண்ணிக்கையாகும்.
என்றாலும், இன்று திங்கட்கிழமை (ஜனவரி 24) வரையிலான ஒருவாரத்தில், தொற்று விகிதம் 17.03 விழுக்காடாகக் கூடியது. டிசம்பர் 27ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், அந்த விகிதம் வெறும் 0.63 விழுக்காடாக இருந்தது. ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்திருப்பதே இதற்குக் காரணம்.
“இந்தியாவில் சமூக அளவில் ஓமிக்ரான் பரவி வருகிறது. பல்வேறு பெருநகர்களில் இதுவே ஆதிக்கமுள்ள திரிபாக உள்ளது,” என்று SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு ஜனவரி 10ஆம் தேதி தெரிவித்து இருந்ததாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.
ஓமிக்ரான் பாதிப்புகளில் பெரும்பாலானவை இலேசானதாக உள்ளதாக அந்தக் கூட்டமைப்பு கூறியது. என்றாலும், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அது சுட்டியது.
இந்நிலையில், இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நிதி நடுவம் மும்பை உள்ளிட்ட பெருநகர்களில் தொற்றுப் பாதிப்பு உச்சம் தொட்டு கடந்த இரு வாரங்களாக குறைந்து வருகிறது.
என்றாலும், இந்த நிலை மாறலாம் என்றார் மகாராஷ்டிர மாநில அரசாங்க ஆலோசகர் டாக்டர் சுபாஷ் சாலுங். காரணம், ஓமிக்ரான் திரிபு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பரவி வருகிறது.
எனவே, அடுத்த எட்டு முதல் 10 வாரங்களில் தொற்று பலமுறை உச்சம் தொடுவதை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.