இருமல் ஒலியை வைத்து கொரோனா உள்ளதைக் கண்டறியும் செயலி; ஃபைசர் நிறுவனம் வாங்கியது
ஒருவரின் இருமல் சத்தத்தைக் கொண்டு அவருக்கு கொவிட்-19 உள்ளதா என்று அறியக்கூடிய கைப்பேசி செயலியை ஃபைசர் நிறுவனம் வாங்கியுள்ளது.
பிசிஆர் பரிசோதனைகள், ஏஆர்டி பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு மாற்றாக எதிர்காலத்தில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் நம்புகிறது.
ஃபைசர், 179 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (164 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) கொடுத்து செயலியை விலைக்கு வாங்கியுள்ளது.
ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற மூச்சு தொடர்பான பலவகை நோய்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு அச்செயலி கண்டறிகிறது.
ஒருவர் இயல்பாக இருமினாலும் வேண்டும் என்றே இருமினாலும் செயலியால் நோய் என்னவென்று கண்டுபிடிக்க முடியும்.
மேலும், காய்ச்சல், மூக்குச் சளி போன்ற அறிகுறிகள் உள்ளன என்று பதிவிட்டால், செயலி அவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்ந்து நோய் எவ்வளவாகக் கடுமையாக உள்ளது என்று கணிக்கும்.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தொடங்கிய ரெஸ்ஏப் ஹெல்த் எனும் புதிய நிறுவனம் செயலியை உருவாக்கியுள்ளது.
கொவிட்-19 உள்ளவர்களை 92 விழுக்காட்டு துல்லியத்துடன் செயலி அடையாளம் காண்கிறது.
கொவிட்-19 இல்லை என்பதை 80 விழுக்காட்டு துல்லியத்துடன் அடையாளம் காண்கிறது.