இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
இங்குள்ள தடுப்பூசி நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை பரபரப்பாக காணப்பட்டன. மொடர்னா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி இருப்பதே இதற்குக் காரணம்.
காக்கி புக்கிட் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு காலை 10.15 மணிக்கு சென்று நிலவரத்தைக் கண்டறிந்தது. அப்போது 50க்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மூத்தோர்.
இருவகை கொவிட்-19 திரிபுகளைக் குறிவைக்கிறது என்பதால் இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்புவதாக மக்களில் சிலர் கூறினர். ‘எக்ஸ்பிபி’ ஓமிக்ரான் துணைத் திரிபு காரணமாக தொற்று அதிகரித்துள்ளதால், கூடுதல் பாதுகாப்பு பெறுவதற்காக தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்திருப்பதாக மற்ற சிலர் கூறினர்.
மொடர்னாவின் இந்த இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் செப்டம்பரில் ஒப்புதல் அளித்திருந்தது.
கடைசியாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகியிருந்தால் 50 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒன்பது கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.