முதியவர்களுக்கான தடுப்பூசி திட்டம் பிப்ரவரி 22ஆம் தேதி துவக்கம்
நாட்டின் கொவிட்-19 கிருமித்தொற்று தடுப்பூசி திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி முதல் இதற்கான முன்னோடித் திட்டத்தில் அங் மோ கியோ, தஞ்சோங் பகார் வீடமைப்புப் பேட்டைகளில் வசிக்கும் 70 வயதுக்கும், அதற்கு மேற்பட்ட முதியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இது குறித்த மேல் விவரங்களை வெளியிடும் என்று தெரிவித்த பிரதமர், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு அல்லது இறுதிக்குள் நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வைப்பது இலக்காகும் என்றார்.
சீனப்புத்தாண்டின் முதல் நாளில் சாங்கி பொது மருத்துவமனை முன்னிலை ஊழியர்களை சந்தித்த பிரதமர் லீ இத்தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
எல்லோருக்கும் போதிய தடுப்பூசி இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து அவற்றை கொண்டு வரப்போவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
இதுவரையில் 250,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி வருவதற்கு தாமதம் ஏற்பட்டாலும் தேவைப்படும் தடுப்பூசிகளை இவ்வாண்டிற்குள் பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு வர வேண்டிய தடுப்பூசிகளில் தாமதம் நிலவினால், சிங்கப்பூரின் தடுப்பூசி திட்டத்தை சற்று நீடிக்க வேண்டி இருக்கும் என்றார் அவர்.
அதோடு பாதுகாப்பு நடைமுறைகளை நீட்டிப்பதோடு இன்னும் கண்டிப்புடன் செயல்படுவதாக இருக்குமென்றார்.
நாட்டில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நாம் கொவிட்-19க்கு முந்தைய வாழ்க்கைமுறைக்கு திரும்பப்போவது இல்லை என்றும் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பர் என்பதை கூறமுடியாது என்றும் சொன்னார் திரு லீ.
"சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டார்கள், அதனால் கிருமித்தொற்று அவர்களை தாக்கும் அபாயம் உண்டு. நமது எல்லைகளை முழுமையாக மூட முடியாது. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதற்கான தேவை இருக்கும். கிருமித்தொற்றுடன் வருபவர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்துடன் சிறிது காலம் வாழ்க்கையை நீடிக்கும் சூழ்நிலை எதிர்பார்க்கப்படுகிறது," என்று பிரதமர் விளக்கினார்.