தேசிய அளவில் அல்லது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொண்டு, அவற்றைப் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் இருதரப்பு உடன்பாட்டை இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள், வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இந்த மாற்றம் இம்மாதம் 25ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
ஆயினும், அவர்கள் ‘ஆர்டி-பிசிஆர்’ சோதனையில் ‘தொற்று இல்லை’ என உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றை அளிக்க வேண்டும்.
வெளிநாட்டுப் பயணிகள் முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டிருந்தால் அல்லது தடுப்பூசி போட்டிருக்காவிடில், இந்தியாவில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
அதன்பின் அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர். அவர்கள் தங்களை வீட்டிலேயே ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளுக்கு அனைத்துலகப் பயணிகள் இணங்கி நடக்க வேண்டும்.
தேசிய அளவில் அல்லது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வது என, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நேப்பாளம், பெலருஸ், லெபனான், ஆர்மீனியா, உக்ரேன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா ஆகிய 11 நாடுகளுடன் இந்தியா இருதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது 15 நாள்களுக்குப்பின், அந்நாடுகளில் இருந்து இந்தியா செல்வோர் விமான நிலையத்தைவிட்டு உடனடியாக வெளியேறலாம். அவர்கள் அடுத்த 14 நாள்களுக்குத் தங்களது உடல்நிலையை சுயமாகக் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.
பயணத்திற்குமுன் அனைத்துப் பயணிகளும் ‘ஏர் சுவிதா’ இணையப் பக்கம் வழியாக சுயஉறுதிமொழிப் படிவத்தை அளிக்க வேண்டும். அத்துடன், கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ‘ஆர்டி-பிசிஆர்’ பரிசோதனை முடிவையும் அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயணத்தைத் தொடங்குமுன் 72 மணி நேரத்திற்குள் அவர்கள் அப்பரிசோதனையை செய்திருக்க வேண்டும்.
அந்த மருத்துவ அறிக்கை உண்மையானது என அவர்கள் உறுதியளித்திட வேண்டும். பொய்யறிக்கை தாக்கல் செய்வோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.