சிவசுப்பிரமணியம் சிறு வயதிலிருந்தே பொறியியல் துறையில் அதிக ஆர்வம் காட்டிவந்ததை அவருடைய சிறு சிறு செயல்களிலிருந்தே தெரிந்துகொள்ளமுடிந்தது.
தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்றவற்றின் பாகங்களைப் பிரித்து அப்பாகங்களைத் திரும்பவும் அடுக்குவது என தம் குழந்தைப் பருவம் முழுக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டுதான் விளையாடினார்.
தற்போது, ‘சியர்ஸ்’ என்னும் தொழில்நுட்ப ‘கிளவுட்’ நிறுவனத்தில் துணை பிரதமராகவும் தரவு ஆய்வு குழுவின் அனைத்துலகத் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார் இந்தியரான 38 வயது சிவா.
சியர்ஸ் நிறுவனம், வர்த்தகங்களுக்குத் தொழில்நுட்ப சேவைகள், செயற்கை நுண்ணறிவுச் சேவைகள், தரவு ஆய்வுச் சேவைகள் என பல்வேறு வழிகளில் உதவுகின்றது. கூகிள் கிளவுட் தளத்திற்கு வட்டார அளவில் சேவைகளை ஒருங்கிணைக்கும் ஆக பெரிய தளமாக விளங்குகின்றது, சியர்ஸ்.
இங்கு முக்கிய பங்கினை வகிக்கும் சிவா, ஒவ்வொரு நாளும் தம் பணியை ஆரம்பிக்கும்போது தென்கிழக்காசிய குழுவின் பணிகளை திட்டமிட்டு சமாளிக்கிறார். இரவில் தம் அமெரிக்க குழுவோடு மெய்நிகர் சந்திப்புகளை மேற்கொள்வார். நாளுக்கு நாள் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் என்றாலும், வேலைக்கும் தம் சொந்த வாழ்விற்கும் உகந்த நேரத்தை ஒதுக்கி வைத்து, சீரான வாழ்க்கைமுறையை மேற்கொள்வது முக்கியம் என நம்புகிறார்.
மொத்தம் 20கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று பணிபுரிந்துள்ள இவர், இந்தியாவின் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். மற்றவர்களோடு உரையாடுவதும் புது கலாசாரங்களைப் பற்றி கற்றுக்கொள்வதையும் விரும்பும் சிவசுப்பிரமணியம், ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும்போது புது அனுபவங்களை பெறுவதோடு புது உணவு வகைகளையும் உண்பதில் இன்பம் காண்கிறார்.
சிங்கப்பூரில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ள சிவா வேலை நிமித்தமாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அங்கு கற்ற விஷயங்கள், பெற்ற அனுபவங்கள் பல இன குழுவைச் சமாளிப்பதற்குத் தமக்குப் பெரிதும் உதவியது என்றார்.
“உலகமெங்கும் இருக்கும் எனது சக ஊழியர்கள், பல்வேறு கலாசார பின்னணிகளைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் அவர்களை சமாளிக்கும் தலைவராகவும் பணிபுரிவதை அதிகம் விரும்புகின்றேன்,” என்றார் சிவா.
திறமைவாய்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில் பெருமிதம் கொள்ளும் சிவா, உலகம் முழுக்க இருக்கும் பலருக்கும் தம் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அஸ்தெக்கா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் முனைவர் பட்டம் பெற்ற சிவா (Doctor of Science in CS And IT), “எனது வேலையில் எனக்கு மிகவும் பிடித்த அங்கம், மற்றவர்களை அடுத்த தலைவர்களாக தயார்படுத்துவதும் எனது நிறுவனத்திற்கு நல்ல வர்த்தக வாய்ப்புகளை தேடுவதும் ஆகும்,” என்றார்.