கடந்த ஒரு மாதமாக தினந்தோறும் நோன்பு வைத்து அதன் நிறைவாக நேற்று இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.
ஈகைப் பெருநாள் என்றும் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை இஸ்லாமியர் சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்ய ஊக்குவிக்கிறது. அதனால் இவர்கள் அதிகமாக சமய வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் நன்கொடைகளும் வழங்குவார்கள்.
தொடக்கநிலை ஆறில் பயிலும் 12 வயது அஃப்ஷீன், தொடக்கநிலை மூன்றில் பயிலும் 9 வயது அத்தீஃபா சகோதரிகள் கடந்த 30 நாட்களும் நோன்பு வைத்து நோன்புப் பெருநாளை வரவேற்றனர்.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் உணவு உண்டு நோன்பு நோற்று இரவு 7 மணியளவில் நோன்பு திறந்தனர்.
இந்த நோன்புப் பெருநாளை புத்தாடைகள் அணிந்து ருசியான உணவருந்தி குடும்பத்தோடு கொண்டாடினர்.
கொவிட்-19 கிருமித் தொற்றை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகளால் கடைகளுக்குச் சென்று புத்தாடைகள் வாங்கமுடியவில்லை. இருப்பினும் அவர்களது பெற்றோர் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர்.
மூன்று வயதான நூர் ரவ்னக் நபவ்வியா தமது தாத்தா, பாட்டி, தாய், தந்தையுடன் குதூகலத்துடன் பெருநாளைக் கொண்டாடினார்.
இனிப்புப் பலகாரங்கள் சாப்பிட்டு பெரியவர்கள் வழங்கிய அன்பளிப்புகளை வாங்கிக்கொண்டு ஆனந்தத்துடன் உள்ளார் ரவ்னக்.