வேலாயுதம்பாளையம்: அதிமுகவினர் கொடுக்கும் 1,000, 2,000 ரூபாய்களை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்து ஏமாந்து போய்விடாதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் திமுக= காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள நல்ல பல திட்டங்கள் மூலம் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை கிடைக்கும் பலனை கோட்டைவிட்டு விடாதீர்கள். இவ்வாறு பேசியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வேலாயுதம்.
அரவாக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வேலாயுதம் பாளையத்தில் பிரசாரம் செய்தார்.
இந்தியாவிலேயே இலவச மின்சாரத்தை வழங்கியதோடு விவசாயிகள் வாங்கிய ஏழாயிரம் கோடி ரூபாய் கடன் தொகையையும் தள்ளுபடி செய்து விவசாயிகளின் இக்கட்டைப் போக்கியவர் முன் னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி.
இதனால் அதிகளவில் பயனடைந்தவர்கள் கொங்கு நாட்டு விவசாயிகள்தான் என்றார் ஈஸ்வரன்.
அதேபோல் இந்தத் தேர்தலிலும் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாகவும் நிலமில்லாதவர்கள் வாங்கிஉள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடனைத் தள்ளுபடி செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு மாதம் 6,000 ரூபாய், சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் குறைப்பு, கடன் தள்ளுபடி என்று திமுக - காங்கிரஸ் கூட்டணி பல திட்டங்களை அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.