சிதம்பரம்: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல் சுற்றில் இருந்தே திருமாவளவனுக்கும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றிபெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடுமையான போட்டிக்குப் பின் வென்று இருக்கிறோம். இவ்வெற்றியை சிதம்பரம் மக்களுக்குக் காணிக்கையாக்குகிறோம். தமிழகம் எப்போதும் சமூக நீதியின் அடிப்படையில்தான் நடைபோடும் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது,” என்று சொன்னார்.