சென்னை: திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.
சுமார் 48 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைப் புரட்டிப் பார்த்தால் இதே மாதிரியான சம்பவம் நடந்திருப்பதைக் காண முடியும்.
1969ல் திமுக தலைவராகவும் முதல்வராகவும் பதவி வகித்த அண்ணா மறைந்தார். அவரின் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவராக அதே ஆண்டில் பதவியேற்றார் கருணாநிதி.
நாட்டின் 5வது மக்களவைத் தேர்தல் 1971 மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. தான் திமுக தலைவரான பிறகு நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியுடன் கைகோத்தார் கருணாநிதி.
அப்போது இந்திரா தலைமையில் ஓரணியும் மொரார்ஜி தேசாய், காமராசர் தலைமையில் மற்றொரு அணியும் காங்கிரசில் இருந்தன.
அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைத்தன. திமுக 23 இடங்களையும், இந்திரா காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது. கம்யூனிஸ்ட்டுகள் 4 இடங்களில் வெற்றிவாகை சூடினர். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கும் முஸ்லிம் லீக்கும் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றன.
சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காமராசர் மட்டும் நாகர்கோயிலில் வெற்றி பெற்றார்.
அதேபோல திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நடைபெற்ற முதல் தேர்தல் 2019=ல் நடைபெற்றது. இதிலும் திமுக கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 இடங்களைக் கைப்பற்றியது.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு எதிர்கொண்ட முதல் தேர்தலின் முடிவுகளில், தந்தைக்கும் தனயனுக்குமான ஒற்றுமை இது.