புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை அடுத்து அக்கட்சியில் இருந்து விலகி பலர் பாஜகவுக்கு தாவியுள்ளனர். இதனால் அக்கட்சித் தலைவி மம்தா பானர்ஜி கடும் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்களுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
டெல்லியில் நடைபெற்ற இணைப்பு நிகழ்வில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் பாஜக தேசிய பொதுச்செயலர் கைலாஷ் விஜய் வார்க்யா முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய விஜய் வார்க்யா, தற்போது நடந்திருப்பது முதற்கட்ட மாற்றம் தான் என்றார்.
“மேற்குவங்க மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றன. அதே போல் திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்வும் ஏழு கட்டங் களாக நடைபெறும்,” என்றார் விஜய் வார்க்யா.