சுதாஸகி ராமன்
மடிக்கணினியில் வீட்டுப் பாடங்களைச் செய்துகொண்டிருக்கும்போது 'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகத் தளங்களால் திசைதிருப்பப்படுகிறார் காயத்ரி. நேரம் போவதே தெரியாமல் சமூக ஊடகங்களில் மூழ்கிவிடும் அவர், பல நேரங்களில் வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்காமல் போவதுண்டு. வீட்டுப்பாடத்தை பள்ளி இடைவேளையின்போது அரக்கப் பரக்க முடிப்பதும் உண்டு. பள்ளி முடித்த கையோடு இணைப்பாட நடவடிக்கைகள்; அதனை முடித்து வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிவிடும். அதற்கு மேல் வீட்டுப்பாடங்களை முடித்துத் தூங்குவதற்குள் நள்ளிரவு மணி 12 ஆகிறது. இவ்வாறு இயங்கும் 15 வயது ஆதித்யாவுக்கு ஆறு மணி நேர உறக்கம் தான் கிடைக்கிறது.
"வீட்டிற்கு வரும் நேரம் முதல் நள்ளிரவு வரை சமூக ஊடகங்கள் போன்றவற்றால் திசைதிருப்பப்படாமல் பாடங்களில் மட்டும் ஆதித்யா அக்கறை செலுத்தி வருவதை நான் கவனித்து வருகிறேன்," என்றார் ஆதித்யாவின் தாயார் திருமதி பினித்தா. இருப்பினும், காயத்ரி, ஆதித்யா ஆகியோரைப்போல பல சிங்கப்பூர் பதின்மவயதினர் குறைவான நேரம் மட்டுமே உறங்கும் போக்கைக் கொண்டுள்ளனர். ஒருவரின் உடற்பயிற்சி, உணவு முறைகள், தூக்கம் போன்றவற்றை கணக்கிடும் செயலியை உருவாக்கியுள்ள 'ஜாபோன்' நிறுவனம் ஈராண்டுகளுக்கு முன்பு செய்த ஆராய்ச்சியில் பொதுவாக சிங்கப்பூரர்கள் குறைவான நேரமே உறங்குகிறார்கள் என்பது தெரியவந்தது.