நித்திஷ் செந்தூர்
பாலர்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரியும் அனுபவம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் வியந்ததுண்டா? முயன்று பார்த்தனர் 66 இளையர்கள்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் 'சூப்பர்ஹீரோ மி' எனும் சமூக, கலைகள் இயக்கமும் இணைந்து இம்மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தன. பாலர்கல்வித் துறையில் பயிலத் தகுதியுள்ள உயிர்நிலைப்பள்ளி, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் சிலர் பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் அனுபவத்தைப் பெற்றனர். 'தி கேட்டர்பில்லர்'ஸ் கோவ்' குழந்தை மேம்பாடு, கல்வி நிலையத்தைச் சேர்ந்த 27 பாலர்களை இம்மாணவர்கள் வழிநடத்தினர். நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஆரம்பகாலப் பாலர் கல்வி, குழந்தை மனநலம் மற்றும் ஆரம்பகாலக் கல்வி ஆகிய துறைகளில் பயிலும் இளையர்கள் இப்பயிலரங்கில் ஒருங் கிணைப்பாளர்களாகச் செயல் பட்டனர்.
பாலர்களிடம் எப்படி உரையாட வேண்டும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும், பரிவுடன் நடந்து கொள்வது எப்படி என்பது போன்ற நுணுக்கங்கள் பயிலரங்கில் பங்கேற்ற இளையர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. 'வேறுபாடுகளைத் தாண்டி நாம் அனைவரும் ஒன்று தான்' என்ற சிந்தனையை மாணவர்களின் மனதில் வேரூன்றச் செய்வது, அதன் மூலம் சிறப்பு தேவைகள் உடைய பாலர்களைக் கேலி செய்யக்கூடாது என்ற நற் குணத்தைக் கற்பிப்பது போன்றவற்றை பாலர்களின் மனதில் பதியச்செய்வது அவசியம் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தினர். பயிலரங்கில் கற்றுக்கொண்ட விஷயங்களை பாலர்களிடையே செயல்படுத்திய மாணவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் கண் காணித்து அவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டினர்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் குழந்தை மனநலம், ஆரம்பகாலக் கல்வித் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் காயத்ரி (பாலருடன் உரையாடுபவர்) ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தப் பயிலரங்கில் பங்கேற்றவர்களோடு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி