மா. பிரெமிக்கா
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய இன்றைய இளம் தலைமுறையினரின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்தவுள்ளது சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை. உலகத் தமிழ்ப் பல்கலைக் கழக இளையர் மாநாடு 2012, சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2014 ஆகியவற்றின் வரிசையில் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் அடுத்த மாதம் 23, 24 தேதிகளில் 'கிராஸ் ரூட்ஸ் கிளப்'பில் நடைபெறவுள்ள 'சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2016' மூலமாக இதைச் சாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 'இளையர் சித்தாந்தம்' என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பை அமைச்சுகளுக்கும் தமிழ்ச் சமூக அமைப்புகளுக்கும் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் அனுப்பவுள்ளனர்.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு இந்த 'இளையர் சித்தாந்தம்' கைக்கொடுக்கும் என்று நம்புவதாகக் கூறினார் தமிழ்ப் பேரவையின் தலைவர் வி.அருள் ஓஸ்வின், 23. 16 முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 150 மேல்நிலைக் கல்வி, பல்கலைக்கழக மாணவர்களும் இளையர்களும் மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. எட்டு முதல் பத்துப் பேர் அடங்கிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட நெறியாளர்களின் உதவியுடன் தலைமைத் துவம், கலை மற்றும் கலாசாரம், கல்வி, சமூகச் சேவை என 4 பிரிவுகளில் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த பல அம்சங்களை இளையர்கள் ஆராய வுள்ளனர்.
நிபுணர்கள் பங்கேற்கும் பகிர்வு அங்கங்களும் கேள்வி பதில் அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும். மாநாட்டில் கலந்துரையாடப்படும் பிரிவுகளைப் பற்றிய விவரங்கள், பல தரப்பட்ட கருத்துக்கள் போன்றவை ஆவணப் படுத்தப்பட்டு மாநாட்டில் கலந்துகொள்ளும் இளையர்களுக்கு வழங்கப்படும்.
இளைய சித்தாந்தம் ஆவணத் தொகுப்பை உருவாக்க உதவும் பல்கலைக்கழக மாணவர்கள். படங்கள்: தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை