நித்திஷ் செந்தூர்
தோசை சுடுவது முதல் நாடகத் திறன்களைக் கற்றுக்கொண்டது வரை பலவிதமான உற்சாகமளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பண்பாட்டு விழுமியங்களை அறிந்துகொண்டனர் உயர்நிலை ஒன்றில் பயிலும் 120 உயர்தமிழ் மாணவர்கள். வகுப்பறையில் மட்டும் தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் இருந்துவிடாமல் வெளிப்புறச் சூழலிலும் அது நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 'தமிழ்மொழி பண்பாட்டு முகாம் 2016' உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சென்ற சனிக்கிழமை உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பழைய புகைப்படம் ஒன்றைக் கொண்டு வந்த மாணவர்கள் 'என் வாழ்க்கை என் பயணம்' என்ற தலைப்பில் தங்களது முன்னோர் பற்றிய மனதை வருடும் நினைவுகளைக் குறிப்புகளாக வடித்தனர்.
மற்ற மாணவர்கள் 'வாழும் மொழி வாழும் மரபு' எனும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாரம்பரியக் கூறுகள் மூன்றைத் தேர்ந்தெடுத்து அதன் தொடர்பில் கதை ஒன்றை எழுதினர். தமிழர் பாரம்பரியம், முன்னோர்களின் சுய வரலாறு பற்றி அறிந்துகொள்ள இந்த அங்கம் வாய்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து கைக் கணினியைப் பயன்படுத்தி விளையாடும் மின் புதையல் வேட்டை, மொழி வளத்தை மேம்படுத்த உதவும் மொழி விளையாட்டு, கூச்சமின்றி, சரளமாகப் பேசுவதற்கான நுணுக்கங்களை விளக்கிய 'நானும் படைப்பாளன்', மாறுபட்ட கோணத்தில் புகைப்படங்களை விவரிக்கும் 'பேசும் படமும் பேசாக் கதையும்', விதவிதமாய் தோசை செய்ய ஊக்குவித்த 'வண்ணச் சமையல்' ஆகிய நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
உள்ளூர் தொலைக்காட்சி படைப்பாளர் திரு.நரேன், மாணவர்களிடம் பேச்சின் நுணுக்கங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். "சரளமாகப் பேசுவதற்கான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். மற்றவர்களிடம் கலந்து உரையாடும்போது பயம் விலகியது. பயம் இல்லாமல் பேசுவது முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டேன்," என்று கூறினார் கோவோ சுவான் பிரஸ்பட்டேரியன் உயிர்நிலைப் பள்ளியில் முதலாண்டு பயிலும் அஹமது முஸ்தபா, 14. "அம்மா சுட்ட தோசையை இதுவரை சாப்பிட்ட பழக்கம்தான் உண்டு. முதன்முறையாக தோசை சுடும் அனுபவத்தைப் பெற்றேன். எனது குழுவினர் 'அ' எனும் தமிழ் எழுத்தின் வடிவில் தோசையைச் சுட்டனர்," என்ற விக்டோரியா பள்ளி மாணவர் அபிநவ் ஆனந்த் அரவிந்தன்,
13, தோசையைத் திருப்புவது மிகவும் சிரமமான வேலை என்றார். "எதிர்காலத்தில் மாணவர் களை தமிழ் நிகழ்ச்சி படைப் பாளர்களாகவும் நிகழச்சி நெறி யாளர்களாகவும் உருவாக்கும் பொருட்டு இந்த முகாமில் 'நானும் படைப்பாளன்', 'நாடகப் பட்டறை' போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன," என முகாமின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் ரா.விமலன் கூறினார். "தமிழ் கற்றல் மொழி மட்டும் அல்ல, அது வாழ்வியல் மொழி. எதிர்காலத்தில் மாணவர்கள் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் அதில் தமிழ் சார்ந்த ஈரம் இருக்க வேண்டும்," என்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் அன்பரசு ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
வண்ணமயமாகவும் 'சாக்லெட்', காய்கறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சுவையாகவும் தோசையைப் பல வடிவங்களில் சுட்டு அசத்திய இளையர்கள் தோசையைத் திருப்பிப் போடுவது மிகவும் சிரமமான செயல் என்றனர். படம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்