நித்திஷ் செந்தூர்
தளராத மனதுடன் வற்றாத உழைப்பின் காரணமாக உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சரவணன் குணசீலன், 25. இம்மாதம் ஒன்பதாம் தேதி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து உயிர்அறிவியல் துறையில் 'ஹானர்ஸ்' (உயர் சிறப்புத் தேர்ச்சி) தகுதியுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். வெற்றி இவருக்கு அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை. கல்விச் செலவுகளைச் சமாளிக்க அவருக்கு நிதி நெருக்கடி இருந்தது. வங்கியிலிருந்து கல்விக்கடன் பெற்றிருந்தபோதும் படிப்பு சார்ந்த இதர செலவுகளை அவரால் சமாளிக்க இயலவில்லை. நிதிச் சுமையைக் குறைக்க மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை நடத்தினார்.
நேரத்தை நன்கு வகுத்து, படிப்பையும் சமூக நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டையும் நேர்த்தியாக நிர்வகித்துக் கொண்டார் சரவணன். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, இவர் 'என்யுஎஸ்எஸ்யு எங்கேஜ்' எனும் புதிய புறப்பாட நடவடிக்கையை உருவாக்கினார். இதர துறையில் பயிலும் மாணவர்களும் இந்தப் புறப்பாட நடவடிக்கையில் இணைந்து தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறி, துடிப்புமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்க இது வழி வகுத்தது. "வாரந்தோறும் 'யூசுஃப் இஷாக் ஹவுஸ்' எனும் மாணவர் கூடத்தில் நடைபெறும் ஒன்றுகூடலின்போது ஆண்=பெண் உறவு, படிப்பு, மன உளைச்சல் எனப் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி கலந்துரையாடல் நடைபெறும்," என சரவணன் கூறினார்.