சுதாஸகி ராமன்
எந்தவொரு பிரச்சினைக்கும் நடைமுறைக்குத் தகுந்தபடி லாபகரமான தீர்வுகளைக் கண்டுபிடித்து சமூகத்திற்குப் பொறியாளர்கள் ஆற்றும் முக்கிய பணியை குமாரி அம்ரிதா ராஜகுமார் இளம் வயதிலேயே புரிந்துகொண்டார். பொறியாளர்களாகப் பணிபுரியும் தம் பெற்றோரைக் கவனித்து வந்த அவர், அவர்கள் காட்டிய பாதையைப் பின்பற்றி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியல் துறையில் சேர்ந்தார். அத்துறையில் சிறந்து விளங்கிய 22 வயது அம்ரிதா, பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாகக் கடந்த வாரம் 'ஹானர்ஸ்' (உயர் சிறப்புத் தேர்ச்சி) தகுதியுடன் பட்டம் பெற்றார்.
"என்னை வளர்த்த சமூகத்திற்கு என்னால் இயன்றதைத் திருப்பிக்கொடுக்க எண்ணினேன். அதை என் நீண்ட நாள் குறிக்கோளாக வைத்திருந்தேன். தேசிய தின அணிவகுப்பு, தமிழ் சார்ந்த நடவடிக்கைகள், தொண்டூழியம் போன்றவற்றில் ஈடுபடுவதன் வழியாக என்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்," என்றார் அவர். பல்கலைக்கழகத்தில் பலதரப்பட்ட அணுகுமுறையின் மூலமாகப் பொறியியல் பாடங்களோடு நாடகக்கலை, பொருளியல், பலவகை உயிரினம் போன்ற மற்ற துறைப் பாடங்களையும் பயில அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் பொறியியல் துறையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் தம்மால் பார்க்க முடிந்ததை அம்ரிதா சுட்டிக் காட்டினார்.