முஹம்மது ஃபைரோஸ்
பருவநிலை மாற்றத்தைத் தடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுற்றுப்புறத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சமூகத்தில் பல்வேறு இயக்கங்களைச் செயல்படுத்தி வரும் வேளையில், இவற்றை வெற்றிகரமாக்க அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் வீரப்பன் சுவாமிநாதன், 30. தூய்மையான, பசுமையான சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்கான அவரது தொடர் முயற்சிக்கு கடந்த வாரம் பலன் கிட்டியது. அரசு சார்பற்ற அமைப்பு மற்றும் அடித்தளத் தொண்டூழியர்கள் பிரிவின்கீழ் தேசிய சுற்றுப்புற வாரியம் இவருக்கு 'சுற்றுச்சூழல் நண்பன்' எனும் விருதை வழங்கிச் சிறப்பித்தது. தூக்கி வீசப்படும் பொருட்களை மறுபயன்பாடு செய்வதிலும், கழிவுப் பொருட்களைப் பயனுள்ள பொருட்களாக மாற்றுவதிலும் திரு வீரப்பன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூர் முழுவதும் பல சமூகத் தளங்களில் நடத்தப்படும் 'ரிப்பேர் கோப்பித்தியாம்' எனும் பயிலரங்குகள் தொடருக்கு வித்திட்டவர் இவரே. பழுதாகி வீசப்படக்கூடிய பழைய பொருட்களை எவ்வாறு பயனுள்ளதாக்குவது என்பது குறித்து இங்கு பயிற்சிபெற்ற தொண்டூழியர்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகின்றனர். "மக்கள் எளிதில் வீசிவிடும் பழைய பொருட்களில் பெரும்பாலானவற்றைப் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன்," என்றார் 'சஸ்டெய்னபள் லிவிங் லேப்' எனும் சமூக நிறுவனத்தின் இயக்குநரான திரு வீரப்பன். 2014ஆம் ஆண்டு முதல் 35,000க்கும் மேற்பட்டோர் 26க்கும் அதிகமான இத்தகைய பயிலரங்குகளில் பங்கெடுத்துள்ளனர். ஒவ்வோர் அமர்விலும் சராசரியாக 32 பொருட்கள் பழுதுபார்க்கப் பட்டன.
சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கிய வீரப்பன் சுவாமிநாதனுக்கு 'சுற்றுச் சூழல் நண்பன்' எனும் விருதை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (இடது) வழங்கினார். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்