மின்னியல் பொறியியல் துறையில் இவ்வாண்டு பட்டம் பெற்று அதே துறையில் சில மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்கும் என்னிடம் 'ஒரு பெண்ணாக இருந்து இத்துறையில் இருப்பது கடினமாக இல்லையா?', 'இத்துறையில் படிக்கும் சிரமத்தை எப்படி சமாளிக்கிறாய்?' எனும் இரு கேள்விகளைப் பலர் கேட்டிருக்கின்றனர். பொதுவாக ஆண்களே இந்தத் துறையை அதிகம் தேர்ந்தெடுப்பதால் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் இந்தக் கண்ணோட்டம் அக்கறைக்கு உரியதாகவே இருக்கிறது. அக்காலத்தைப்போல இந்தத் துறையில் உடலை வருத்திப் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை. பெரும்பாலும் கணினியைப் பயன்படுத்தியே இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. என்னையும் சேர்த்து பல பெண்கள் பல காலமாகவே இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். பாலின பேதம் பார்க்கத் தேவையில்லை எனும் அளவுக்கு இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. மின்னியல் பொறியியல் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் சவால்கள் உள்ளன. பாடவேலைகள், ஆய்வுகள் போன்றவற்றில் ஈடுபடவேண்டியதிருக்கும். முறையான திட்டமிடலும் ஆர்வமும் சவால்களைச் சாமானியமாக்கிவிடும்.
அம்ரிதா ராஜகுமார். படம்: கீதா ராஜகுமார்