மாணவர்களுக்கு அறிவியலை விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொடுக்கும் நோக்கில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி இம்மாதம் 14ஆம் தேதி நடத்திய அறிவியல், தொழில்நுட்ப சவாலில் விக்டோரியா பள்ளி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்கள். 29 பள்ளிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் மொத்தம் 15 பிரிவுகள் இருந்தன. வெற்றி பெற்ற விக்டோரியா பள்ளி மாணவர்கள், 'Vortex Ring Air Cannon' எனும் பிரிவில் கலந்துகொண்டவர்கள். பள்ளித் தேர்வுகள் முடிந்ததால், இந்த நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிட இப்போட்டியில் பங்கேற்றதாகக் கூறினார் விக்டோரியா பள்ளியில் உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் 15 வயது நிருபன் நவநீதன்.
எட்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்த அறிவியல், தொழில்நுட்பப் போட்டிகள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் ஆகிய துறைகளில் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருந்தன. போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைப் பயன்படுத்தி வித்தியாசமான தீர்வுகளை வடிவமைத்தனர்.
Vortex Ring Air Cannon பிரிவில் கலந்துகொண்ட மாணவர்கள், வழங்கப்பட்ட காகிதப் பொருட்களைக் கொண்டு 90 நிமிடங்களில் ஓர் அட்டை பீரங்கியைத் தயாரிக்க வேண்டியிருந்தது. போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பந்துகளை அந்தப் பீரங்கியிலிருந்து வரும் காற்று மூலம் போட்டி மேசையில் இருக்கும் 11 துளைகளுக்குள் தள்ளிவிட வேண்டும். மேசையில் பந்து நுழையும் துளைகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றியாளர் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தப் போட்டியை நடத்துவதற்கு முன்பாக அதில் பங்கேற்கும் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு ஒன்றை நன்யாங் தொழிற்கல்லூரி நடத்தியது. போட்டியில் எந்தப் பொருட்கள் கொடுக்கப்படும் என்று தெரியாத காரணத்தினால் அவர்களது ஆசிரியர் போட்டிக்குத் தயார் செய்யும் நோக்கில் பலவிதமான பொருட்களைக் கொடுத்து மாணவர்களைப் பழக்கப்படுத்தினார்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வென்ற விக்டோரியா பள்ளியைச் சேர்ந்த குழுவின் உறுப்பினர்கள் 90 நிமிடங்களில் அட்டை பீரங்கியைத் தயாரித்தனர். அக்குழுவைச் சேர்ந்த (இடமிருந்து) ஆதித்யா ஸ்ரீநிவாசன், நிருபன் நவநீதன், பரம் ஸ்ரீநிவாசன், அழகப்பன் ராமநாதன். படம்: விக்டோரியா பள்ளி, செய்தி: யாஸ்மின் பேகம்