சிங்கப்பூரின் முன்னாள் அதிபரான அமரர் எஸ்.ஆர் நாதனிடம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்குமாறு அழைப்புவிடுத்து அதில் திரு நாதனுக்கே 'தலைசிறந்த சிங்கப்பூரர்' என்ற விருது வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்ச்சியைக் காணொளி மூலம் பதிவுசெய்தவர் ஜனனி தர்மராஜா, 19. அந்தக் காணொளியை 'தி ஹிடன் குட்' எனும் சமூக நிறுவனத்தின் சார்பில் உருவாக்கிய ஜனனி அதனை 'யூடியூப்'பில் பதிவேற்றி பலரது பாராட்டுகளைப் பெற்றார். கருணை மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நல்ல விஷயங்களை மக்களிடையே பரப்பும் 'தி ஹிடன் குட்' அமைப்பில் உள்ளகப் பயிற்சிக்காகச் சேர்ந்தபோது ஜனனிக்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியது.
ஊடகத் துறையில் வடி வமைப்பு, தயாரிப்பு போன்றவற்றின் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனனி சமுதாயத்தில் நடைபெறும் நல்ல விஷயங்களைக் காணொளியாக்கி ஊடகம் மூலம் பரப்ப விழைகிறார். அத்தகைய ஆர்வத்தினால் மக்கள் தொடர்பியல் துறையில் மூன்றாமாண்டு பயில்கிறார் அவர். இருப்பினும், கட்டுரைகள் எழுதுவதில் அவருக்கு அவ்வளவு விருப்பமில்லை. நல்ல கட்டுரைகள் எழுதும் சக மாணவர்களைக் கண்ட ஜனனி, தம்மிடம் எழுத்துத் திறன் இல்லாததற்கு மிகுந்த வருத்தம் கொண்டார். 'தேர்ந்தெடுத்த பாதை சரிதானா?' என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்தது. ஆனால், பெற்றோர் அளித்த ஊக்கத்தினால், நல்ல கட்டுரைகள் எழுத தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார் ஜனனி.
தமக்குள் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறும் ஜனனி, விடாமுயற்சியால் கல்வியில் சிறந்து விளங்குகிறார். நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சார்பில் அனுபவக் கல்விக்காக கம்போடியாவுக்கு 15 நாட்கள் சென்று அங்கிருந்த சிறுவருக்கு ஆங்கிலம் கற்பித்தல் போன்ற தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கம்போடியர் களின் வாழ்க்கைச் சிரமங்களைக் கண்டபிறகு, சிங்கப்பூரில் கிடைக்கும் வசதி, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வெண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகச் சொன்னார். சமூகப் பணிகள் துறையில் பட்டக்கல்வி மேற்கொள்ள விரும்பும் ஜனனி, பிற்காலத்தில் உதவி தேவைப்படும் முதியோர்களுக்கு உதவத் திட்டமிட்டிருக்கிறார்.