யாஸ்மின் பேகம்
தந்தையின் ஆதரவு இல்லை. தாயார் வேலைக்குச் சென்று பொருளீட்ட இயலாததுடன் அவருக்கு மருத்துவச் செலவுகளும் மேற்கொள்ள வேண்டிய நிலை. தம்முடைய கல்விச் செலவு, வீட்டுக்கடன் உள்ளிட்ட குடும்பச் செலவுகள் ஆகிய அனைத்தையும் முன்னின்று கவனித்து குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பில் குடும்பத்தின் மூத்த மகனான 27 வயது ஜோவியன் நைஜல். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இரு முறை பயில வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் முதல் முறை சரியாகப் படிக்காததால் ஏற்பட்ட சறுக்கல், கல்வியின் அவசியத்தை உணரவைத்ததாகக் கூறிய ஜோவியன் மன உறுதி யுடன் தொடர்ந்து முயற்சி செய்கிறார். எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவதே தமது குடும்பத் தைக் காப்பதற்கான சிறந்த வழி என்று உணர்ந்த ஜோவியனுக்கு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உபகாரச் சம்பளம் கிடைத்துள்ளது.
இந்த விருது பொறியியல் அல்லாத பிற துறைகளில் பயிலும் சிறந்த மாணவர்களை அங்கீகரிக்கிறது. தகுதி பெற்ற மாணவர் களுக்கு உதவித் தொகையாக அவர்களின் படிப்பின் முழு செலவையும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஏற்றுக்கொள்கிறது. முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உபகாரச் சம்பளம், ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்படும். வார நாட்களில் இரவு நேர விநியோகிப்பாளராகவும் வார இறுதிகளில் மூக்குக்கண்ணாடிக் கடை ஒன்றில் விற்பனையாளராகவும் பணிபுரிந்து குடும்பத்தைக் காப்பாற்றும் ஜோவியன், சில வேளைகளில் வகுப்புகளுக்குச் செல்ல இயலாமல் போவதும் உண்டு. அத்தகைய நேரங்களில் உடன் பயிலும் நண்பர்கள், ஆசிரியர்களின் ஆதரவினாலும் உதவியாலும் கல்வியில் சிறந்து விளங்குகிறார் ஜோவியன்.
பாடங்களைத் தவறவிடும்போது ஜோவியனுக்காக ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு எடுப்பதுடன் பாடக் குறிப்புகளை எடுத்துத் தந்து நண்பர்களும் உதவுவதாகச் சொன்னார் அவர். இளம் வயதிலேயே குடும்பத் தைக் கட்டிக்காத்து, கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கான உத்வேகத்துக்கு 67 வயதான பாட்டியை முன்னுதாரணமாகக் கூறுகிறார் ஜோவியன். மற்றவரின் உதவியை எதிர்பார்க்காமல் தைரியமாக, தனியாக வாழும் அவர் இப்போதும் மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் எடுப்பதைப் பெருமையாகச் சுட்டிக்காட்டிய ஜோவியன், சிரமங்களைச் சந்திக்கும் வேளை யில் பாட்டியிடமே ஆலோசனை கோருவதாகச் சொன்னார்.